பாலில் கலப்படம்; ஆயுள் தண்டனை
புதுடில்லி:
பால் பொருட்களில் கலப்படம் செய்து விற்போருக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் யோசனை தெரிவித்துள்ளது. நுகரும் மனிதனை கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும் இந்த குற்றம் மிக கொடூரமானது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கடந்த 2011 ம் ஆண்டில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு சேகரித்த பால் மாதிரிகளில், பெரும்பாலனவை கலப்படம் நிறைந்ததாக இருந்தது என்று அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுஇந்த மனுவை கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்தது. நீதிபதிகள்; தங்களின் உத்தரவில், பால் கலப்படம் தொடர்பான விஷயத்தில் உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் ஆகியன குறித்து மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைக்கு ஏதுவாக மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பால் கலப்படம் நுகரும் மனிதனை கடுமையாக பாதிக்கும் . இது கொடூர குற்றம் ஆகும்.
உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் தொடர்பான சட்டத்தில் இருக்கும் தற்போதைய தண்டனை போதாது. ஆயுள் தண்டனை வரை வழங்கிட வழி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.