சுகாதாரமற்ற கோலி சோடா மதுராந்தகம் நகரில் விற்பனை
மதுராந்தகம் : மதுராந்தகம் நகரில், சுகாதாரமற்ற கோலி சோடாக்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆங்காங்கே உள்ள சிறு நகர்கள் மற்றும் கிராமங்களில் செயல்படும் சிறு மற்றும் குறு ஆலைகளில், கோலி சோடாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அஜீரண கோளாறை சரி செய்வதற்காக, இன்றளவும் பகுதிவாசிகள் விருப்பத்துடன் வாங்கி பருகுகின்றனர். அதன்பின், மறு சூழற்சிக்கு செல்லும் சோடா பாட்டில்களை சரியான முறையில் சுத்தம் செய்த பின்னரே, அதில் மீண்டும் சோடா நிரப்பி விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.மதுராந்தகம் பகுதியில் கடந்த சில நாட்களாக விற்பனை செய்யப்படும் கோலி சோடாக்கள் சுத்தம் செய்யப்படாமல், சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
சில கடைக்காரர்கள், தயாரிப்பாளர்களிடம் திருப்பி அனுப்பாமல், காலாவதி சோடாவையும் பகுதிவாசிகளின் அறியாமையை பயன்படுத்தி, விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு தரமற்ற மற்றும் காலாவதி தயாரிப்புகளை பருகுபவர்களுக்கு, வயிற்றுப்போக்கு தொடர்பான நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சோடா உற்பத்தி ஆலைகளை ஆய்வு செய்து, விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.