ஹோட்டல் களில் கெட்டு போன உணவுகள் விற்பனை
ஐஸ் கட்டிகள் தூய்மையான தண்ணிரில் தயாரிக்க வேண்டும்
வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை
வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவித்தால் 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஆர்.கருணாகரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கன்னியாகுமரி பால்குளத்தில் அமைந்துள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமனஅலுவலர் ஆர்.கருணாகரன் தலைமை வகித்து பேசியது: உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்பட்டுவருகிறது.
நாட்டில் அனைவருக்கும் சுத்தமான, சுகாதாரமான உணவுகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இதைத்தவிர ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி சட்டம் உள்ளது. ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் சட்டம் மாறுபடுவதால் இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
குமரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 783 உணவு நிறுவனங்கள் உள்ளன. இதில் 10 ஆயிரத்து 389 நிறுவனங்கள் இதுவரை அரசில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏனைய நிறுவனங்களையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தரமற்ற பொருள்களை விற்பனை செய்வோர் மீது பொதுமக்கள் புகார்அளிக்க ஏதுவாக 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புகார் செய்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ.இளங்கோ வரவேற்றார். கன்னியாகுமரி ஜில்லாநுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் எம்.தாமஸ், அகஸ்தீசுவரம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் பிரவின்ரகு ஆகியோர் பேசினர். கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையத் துணைத் தலைவர் வி.ராஜசேகரன் நன்றி கூறினார்.
மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு போட்டி
குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டி ஆகியன நாகர்கோவில் எஸ்எல்பி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
விழாவில் உணவு பாதுகாப்பு குறித்தும், பாதுகாப்பற்ற உணவுகள் குறித்தும் நியமன அலுவலர் டாக்டர் கருணாகரன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரநாராயணன் ஆகியோர் விளக்கினர். மேலும் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயன், ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அம்மா உணவகத்தில் சாம்பாரில் பல்லி
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி காலையில் இட்லி சாம்பார், மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் 150 பேர் சாப்பிடும் வகையில் உணவு தயாரிக்கப்படுகிறது.
ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கியிருக்கும் உறவினர்கள் உணவுகளை வாங்கி சாப்பிடுவது வழக்கம்.
இன்று காலை நோயாளியுடன் தங்கியிருந்த பெண் ஒருவர் அம்மா உணவகத்துக்கு சென்று இட்லி, சாம்பார் வாங்கிச் சென்று அதனை சாப்பிட்டார்.
அப்போது சாம்பாரில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததாகவும், அதனால் தனக்கு வாந்தி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதை கேட்டதும் மற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் ஆஸ்பத்திரி முழுவதும் பரவி நோயாளிகளிடம் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி ஆஸ்பத்திரி டீன் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கர நாராயணன், நகராட்சி நகர் நல அதிகாரி வினோத் ராஜா, டீன் கண்ணன் ஆகியோர் உடனடியாக அம்மா உணவுகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு காலை உணவு முழுவதுமாக விற்று தீர்ந்தது தெரியவந்தது. அதேசமயம் ஒருவரை தவிர வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் தெரியவந்தது.
அம்மா உணவகத்தில் மீதம் இருந்த சாம்பாரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்காக சேகரித்தனர். அந்த சாம்பார் நெல்லையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. சாம்பாரில் பல்லி கிடந்தது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.