உணவு பாதுகாப்பு சட்டம் திரும்பப் பெறப்பட்டதா? வர்த்தக சங்கப் பொதுச் செயலாளர் விளக்கம்
By சீனிவாசன், பண்ருட்டி
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் திரும்பப் பெறப்பட்டதாக தவறான தகவல் வெளியானது.
இது குறித்து தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் பொதுச் செயலளர் சா. ராஜேந்திரன் கூறியதாவது,
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ஐ, மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதாக சில தனியார் தொலைக்காட்சிகளில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில சங்கங்களும் இதேச் செய்திகளை குறுஞ்செய்தி மூலம் வணிகளுர்களுக்கு அனுப்பி வருகின்றன.
இது முற்றிலும் தவறான தகவல். மத்திய அரசு அவ்வாறு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அதாவது, மத்திய உணவு பாதுகாப்புத் துறை தலைவர் தலைமையில் 22 உறுப்பினர்கள் கொண்ட குழு இருந்தது. அதில் கூடுதலாக தலைமை செயல் தலைவர் ஒருவரை நியமனம் செய்யவும், இக்குழுவின் 3ல் ஒரு பங்கு பெண் உறுப்பினர்களும், 10 நபர்களில் விவசாயிகள், சில்லறை வியாபாரிகள், நுகர்வோர், உணவு விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்க வேண்டும் என ஒரு சட்ட திருத்தத்தை அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கடந்த 19.2.2014 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒப்புதலை பெற இந்த மசோதாவை தாக்கல் செய்தார்கள்.
இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இதனை தற்போதைய மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு 5.11.2014 அன்று திரும்பப் பெறுவதற்கும் புதிய சட்ட திருத்த மசோதாவை இறுதி செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆகவே, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 மத்திய அரசால் திரும்பப் பெறப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று விளக்கியுள்ளார்.