நெல்லை டவுனில் ரூ.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
நெல்லை நவ. 6–
நெல்லை டவுன் நயினார்குளம் பின்பகுதியில் உள்ள வத்தல் மார்க்கெட் குடோனில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற உதவி போலீஸ் கமிஷனர் கந்தசாமி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாகரன், உணவுபாதுகாப்பு அதிகாரிகள் சங்கரலிங்கம், கிருஷ்ணன் ஆகியோர் சம்பந்தப்பட்ட குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 3 விதமான 2 ஆயிரத்து 303 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இதுதொடர்பாக வத்தல் குடோன் உரிமையாளர் ரமேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் நெல்லை–தூத்துக்குடி–குமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கும் புகையிலை பொருட்களை சப்ளை செய்த டீலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்த புகையிலை பொருட்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவைத்து அழித்தனர்.
குடோன் உரிமையாளரான ரமேசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகையிலை சப்ளை செய்ததாக ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிந்தது குறிப்பிடத்தக்கது.