சாம்பாரில் பல்லி: 7 பேர் வாந்தி; டிபன் சென்டரின் உரிமம் ரத்து
பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் அருகே செயல்படும் டிபன் சென்டரில், வாடிக்கையாளர் சாப்பிட்ட சாம்பாரில் பல்லி இருந்ததால், ஏழு பேர் வாந்தி மயக்கமடைந்தனர். இதனால், அந்த டிபன் சென்டர் உரிமம் ரத்து செய்யப்படும் என, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிபாளையம் அடுத்த, ஆவராங்காடு பகுதியில், நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் இறந்தார். இந்த துக்கத்தை விசாரிக்க, சேலத்தை சேர்ந்த பவித்ரா, 13, ராஜாமணி, 45, உஷாராணி, 28, மாரியம்மாள், 40, ஜோதி, 24, திருப்புகழ், 4, கனிஷ்கா, 1, ஆகியோர் சென்றனர். இவர்கள், துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, அருகில் இருந்த, டிபன் சென்டரில் இட்லி வாங்கி சாப்பிட்டனர்.அப்போது, சாம்பாரில் பல்லி மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, சாப்பிடுவதை நிறுத்தினர். சிறிது நேரத்தில், சாப்பிட்ட அனைவரும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள், அவர்களை மீட்டு, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நகராட்சி உணவு கட்டுப்பாடு அலுவலர் கொண்டல்ராஜ் கூறுகையில், ""பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை முடிந்து, நலமுடன் வீட்டுக்கு சென்று விட்டனர். டிபன் சென்டர் நடத்தும் சுப்ரமணி என்பவரின் கடை உரிமம் ரத்து செய்யப்படும். விசாரணை முடியும் வரை, கடையை திறக்கக் கூடாது,”என்றார்.
உரிமம் மற்றும் பயிற்சி பெற்ற நிறுவங்களின் பணியாளர்களை கொண்டு பூச்சி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடைபெற்றதா ?