உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் அப்பளம் உற்பத்தியாளர்கள் வரவேற்பு
மதுரை :உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இதனை அப்பளம் உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர்.இட்லி, தோசை, அப்பளம் தயாரிப்பில் சுவைக்காக சோடா உப்பு கலக்கப்படுகிறது. சோடா உப்பு கலக்கும் உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சோடா உப்பு உடலுக்கு கேடு விளைவிக்காது. சோடா உப்புக்கு பதிலாக மாற்று பொருள் குறித்து அறிவிக்கும்படி அப்பளம் மற்றும் உணவு பொருள் வியாபாரிகள் சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டது.பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில், ராஜ்யசபாவில் 2006ல் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நடைமுறைக்கு வரவில்லை. உணவு பொருள் உற்பத்தியாளர்கள், வியாபாரிகளை பாதிக்காத வகையில் இம்மசோதாவில் திருத்தங்கள் மேற்கொண்டு லோக்சபா குளிர்கால கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.தமிழ்நாடு வடகம், மோர்வத்தல், அப்பளம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க மாநில செயலாளர் திருமுருகன், தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க செயலாளர் வேல்சங்கர் கூறியதாவது: உணவு பொருளில் சோடா உப்பு கலப்பதால் உடல் நலம் பாதிக்கும், என ஆய்வுகளில் நிரூபிக்கப்படவில்லை. சிறு தொழில்களை பாதிக்காத வகையில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம், என்றனர்.