Home > Coimbatore, DISTRICT-NEWS > ஓட்டல்கள், பேக்கரிகளுக்கு நோட்டீஸ்! – உணவு பாதுகாப்பு துறை தடாலடி

ஓட்டல்கள், பேக்கரிகளுக்கு நோட்டீஸ்! – உணவு பாதுகாப்பு துறை தடாலடி

21,August, 2017

கோவை : கொசு உற்பத்தி செய்ய ஏதுவாக சுகாதாரமற்ற முறையில் பராமரித்த ஓட்டல்கள், பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க, சுகாதார துறை சார்பில், தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இருப்பினும் கோவை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கோவை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், டாஸ்மாக் பார்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை உணவுப்பிரிவு நியமன அலுவலர் விஜய் கூறியதாவது:ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றில், தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வுகளில், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கப்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இவற்றில் தேங்கும் நீர் வாயிலாக, கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் ஏற்பட வழி இருப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. அவை உடனடியாக அகற்றப்பட்டன. பிளாஸ்டிக் தட்டுகள், காலியான அட்டைப்பெட்டிகள், பாட்டில்களை உடனுக்குடன் அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஓட்டல்களில் சமையலுக்காக பயன்படுத்த, ஏழு நாட்களுக்கு மேல் தண்ணீர் பிடித்து வைக்கக்கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீரை திறந்து வைக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கும் நிலையில் உள்ள இடங்களை, உடனடியாக சரி செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரம் பின்பற்றாத ஓட்டல்களுக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS