Home > Namakkal > பரமத்திவேலூர் அருகே கலப்பட வெல்லம் தயாரித்த 2 ஆலைகளுக்கு சீல் சர்க்கரை, வெல்லம் பறிமுதல்

பரமத்திவேலூர் அருகே கலப்பட வெல்லம் தயாரித்த 2 ஆலைகளுக்கு சீல் சர்க்கரை, வெல்லம் பறிமுதல்

9,December, 2014
 

பரமத்திவேலூர், டிச.5:

பரமத்திவேலூர் அருகே கலப்பட வெல்லம் தயாரித்த 2 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த பிலிக்கல்பாளையத்தில் வாரத்தில் இருமுறை வெல்லச்சந்தை கூடும். இங்கு சுற்றுவட்டார கரும்பு விவசாயிகள், வெல்லத்தை கொண்ட வந்து ஏலம் விடுவது வழக்கம். இந்நிலையில் வெல்லம் தயாரிக்கும் போது, அதில் சாக்கரை, ரசாயனம் கலக்க கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை பாயும் எனவும் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து, விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டமும் கடந்த மாதம் நடத்தப் பட்டது.

இந்நிலையில் பிலிக்கல்பாளையம் அடுத்த சின்னாகவுண்டம்பாளையத்தில் உள்ள ஆலை ஒன்றில், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அதிகாரி தமிழ்ச் செல்வன், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சிவநேசன், இளங்கோ, சிவசண்முகம் மற்றும் குழுவினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

இதில், 25 மூட்டை, சர்க்கரை, ரசாயனம் கலந்து வெல்லம் தயாரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 25 மூட்டை வெல்லம், 12 மூட்டை அஸ்கா சர்க்கரை, தராசு உள்ளிட்டவற்றை அதிகாரிகள் குழுவினர் கைப்பற்றினர். மேலும், அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும், அதே பகுதியில் உள்ள மற்றொரு கரும்பாலையில் நடந்த சோதனையில் சர்க்கரை, ரசாயனம் கலந்து வெல்லம் தயாரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் 45 கிலோ கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்தனர். மேலும், ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. விதிகளை மீறி கலப்பட முறையில் வெல்லம் தயாரித்த இரண்டு கரும்பா லைகள் குறித்தும் முழு விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories: Namakkal