தரமற்ற உணவு மாதிரிகளின் முடிவு; தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம்
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு உணவு பொருட்கள் தரமாக உள்ளதா என்பது குறித்து எடுக்கப்பட்ட உணவு மாதிரிகளில் 10 மாதிரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா கூறியதாவது: உணவு பொருட்களில் கலப்படம், காலாவதியான பொருட்கள், தயாரிப்பு குறித்து லேபிள் இல்லாத பொருட்கள் உட்பட பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து அவ்வப்போது உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டில் 82 சட்ட உணவு மாதிரிகள் எடுத்து கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டது.அதில் 72 மாதிரிகள் தரமானதாக கண்டறியப்பட்டது. மேலும் தரமில்லாத 10 மாதிரிகளுக்கு டி.ஆர்.ஓ., விஜயா தலைமையில் தலா 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.அதேப்போன்று கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட 87 கண்காணிப்பு உணவு மாதிரிகளில் 48 மாதிரிகள் தரமானது எனவும், 18 மாதிரிகள் தரமில்லாதது எனவும், 21 மாதிரிகள் லேபிள் இல்லாதவை எனவும் முடிவு வந்துள்ளது. தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Well done