Home > DISTRICT-NEWS, Theni > போடி: தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

போடி: தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

28,February, 2015

போடியில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை வெள்ளிக்கிழமை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போடியில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மீனாட்சிசுந்தரம், போடி உணவு பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன், போடி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுல்தான், தர்மராஜ், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

இதில் போடி நகராட்சிப் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் விற்கப்படுவது தெரியவந்தது. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்களை அதிகாரிகள் தீ வைத்து அழித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Theni